ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி38 ராக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.29-க்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
கார்டோஸாட்-2 மற்றும் 30 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தபட்டதாக இஸ்ரோ மையம் தெரிவித்துள்ளது.
திட்டமிட்டபடியே, சுமார் 520 கி.மீ. தொலைவை 17 நிமிடங்களில் கடந்து, புவி வட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன.
முன்னதாக, கார்ட்டோசாட் உட்பட மொத்தம் 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணி நேர கவுன்ட்டவுன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் நேற்று அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது.
துல்லிய கண்காணிப்பு:
பூமியை துல்லியமாக கண்காணிப்பது மற்றும் தொலையுணர்வு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கார்ட்டோசாட் செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தி வருகிறது.
இதுவரை 5 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ, 6-வது செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி38 ராக்கெட் சுமந்து சென்றது.
இந்த பிரதான செயற்கைக் கோளுடன் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ள 15 கிலோ எடையுள்ள சிறிய ரக செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் உட்பட 14 நாடுகள் உருவாக்கியுள்ள 29 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.
31 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 955 கிலோ. செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டின் மொத்த எடை 320 டன். கார்ட்டோசாட் 2 செயற்கைக்கோள் 712 கிலோ எடை கொண்டது.
இது, நில அமைப்பை துல்லியமாக கண்காணித்து, தரமான புகைப்படத்தை அனுப்பும் திறன் உடையது. அதைக் கொண்டு நகர, ஊரக மேம்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். சாலைப் போக்குவரத்து, குடிநீர் விநியோகம், கடலோரப் பகுதிகள் பயன்பாடு உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்காணிக்க முடியும்.